பன்டோரா ஆவண சர்சையில் சிக்கியுள்ள ஸ்ரீலங்காவின் தொழிலதிபரும், முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவருமான திருக்குமார் நடேசனிடம் இன்றைய தினம் 03 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தனது மனைவியான முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பண்டோரா ஆவணம் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து குறித்த ஆவணத்தில் தமது பெயர் வெளியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல தரப்பினரால் திருக்குமார் நடேசன் மீது விசாரணை நடத்தும்படி ஊழல் மோசடி விசாரணைகள் ஆணைக்குழுவில் முறையிட்ட நிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு முன்னிலையாகும்படி திருக்குமார் நடேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே, விசாரணைகளை ஆரம்பித்து வாக்கு மூலம் பதிவு செய்துகொள்ள தற்போது திருக்குமார் நடேசன் இன்றைய தினம் முற்பகலில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.
தொழிலதிபர் திருக்குமார் நடேசன் இன்று முற்பகல் 10 மணியளவில் விசாரணைக்கு முன்னிலையாகியதோடு சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
எனினும் அவர் அங்கிருந்து வெளியேறுகின்ற சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Lanka Newsweek © 2026